27.7.08

லால்பேட்டை கலவரம் பற்றி குமுதம் வார இதழ்


ருடா வருடம் சர்ச்சையைக் கிளப்பும் கடலூர் மாவட்டம் லால்பேட்டை சந்தனக்கூடு திருவிழா, இந்த வருடம் பெரும் கலவரத்தில் முடிந்திருக்கிறது. "

இந்தக் கலவரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன் சிறு `ஃப்ளாஷ் பேக்' ஒன்றைத் தெரிந்து கொள்வது அவசியம். கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை கிராமத்தில் வாழ்ந்து இறந்த `பைஜிஷாஹ் நூரி' என்ற பெரியவரின் உடலை அவரது மகன்கள், அவர் வாழ்ந்த வீட்டிலேயே அடக்கம் செய்து சமாதியாக எழுப்பி னார்கள். அத்துடன் `இவர் ஒரு குரு மகான்' என்று பைஜிஷாஹ் நூரியின் மகன்களும், இவரை வணங்கிவரும் ஆயிரக்கணக்கான சீடர்களும் அவரது சமாதியில் சந்தனக்கூடு திருவிழாவை நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் உள்ளூர் முஸ்லிம்கள், `இஸ்லாம் மதத்திற்கு எதிரான சந்தனக்கூடு திருவிழாவை நடத்தவிடமாட்டோம்' என்று அதை எதிர்த்து வந்தனர். முதல் வருடம் சமாதியில் பாத்தியா ஓதும் நிகழ்ச்சியைக்கூட ஒன்றுகூடி தடுத்து விட்டனர். ஆனால், கடந்த வருடம் இப்படியான எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் தர்கா நிர்வாகிகள் நீதிமன்றத்திற்குச் சென்று தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று போலீஸ் பாதுகாப்புடன் சந்தனக்கூடு திருவிழாவை வெகு சிறப்பாக நடத்திமுடித்துவிட்டனர். இதனால் ஆத்திரமான உள்ளூர் முஸ்லிம்கள் அன்றைய தினம் ஒட்டுமொத்த கடைகளையும் மூடி பந்த் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது குறித்து நாமும் குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படி கடந்த இரண்டு வருடங்களாக சிறு பிரச்னையில் முடிந்த இந்த விவகாரம்தான் இந்த வருடம் பெரும் கலவரத்தில் முடிந்திருக்கிறது.கடந்த இருபத்திரண்டாம் தேதி `பைஜிஷாஹ் நூரி' தர்காவில் மூன்றாம் வருட சந்தனக்கூடு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

மதியம் மூன்றரை மணிவாக்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றுகூடி `பைஜிஷாஹ் நூரி' தர்காவை நோக்கிப் புறப்பட்டிருக் கின்றனர். இத்தனை பேர் ஒன்று கூடி புறப்படும் விஷயம் போலீஸாருக்குத் தெரியவே தெரியாதாம்.

அந்த தர்காவில் ஒரு எஸ்.ஐ. உள்ளிட்ட நான்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தர்காவை நோக்கி வந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் என்னவோ விபரீதம் நிகழப்போகிறது என்று நினைத்த போலீஸார், தங்கள் உயர் அதிகாரியான சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரனுக்குத் தகவல் கொடுத்திருக் கின்றனர். அவரும் சொற்ப போலீஸ் படையுடன் லால் பேட்டைக்கு விரைந்திருக்கிறார்.

ஆனால், சுனாமி போல் வந்த கூட்டத்தின் மத்தியில் இந்த போலீஸாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. முதலில், வந்த கும்பல் தர்கா வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள், மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியிருக்கிறது.

மேலும், கார்களைத் தூக்கிக் கவிழ்த்து உடைத்திருக்கிறது. இதனைப் பார்த்த மக்கள் அலறித் துடித்து ஓடியிருக்கின்றனர். அடுத்து தர்காவினுள் புகுந்த அக்கும்பல் எதிர்ப்பட்டவர்களை உருட்டுக்கட்டைகளாலும், ஆயுதங்களாலும் தாக்கியதில் அந்தப் பகுதியே கலவரத்தில் மிதந்திருக்கிறது.சுமார் முக்கால் மணிநேரம் தாக்குதலைத் தொடர்ந்தவர்கள், தர்காவினுள் இருந்த சமாதியையும் சேதப்படுத்திவிட்டுத்தான் திரும்பியிருக்கிறார்கள். தர்காவின் முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியே சென்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பித்ததாகவும் சொல்கிறார்கள்.

இந்தத் தாக்குதலில் போலீஸார் சிலரும் பலத்த காயமடைந்திருக்கின்றனர். இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு வந்த போலீஸ் படையினர், லால்பேட்டைப் பகுதியில் கண்ணில் பட்ட முஸ்லிம் இளைஞர்களையெல்லாம் அடித்து, உதைத்தனர். பள்ளிவாசலுக்குள் ஓடி ஒளிந்த பலரையும் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது.

கலவரம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸார், சுமார் நாற்பது நபர்களை மட்டும் கைது செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில், இருதரப்பிற்கும் பொதுவான ஒரு முஸ்லிம் இளைஞர் நம்மிடம் பேசினார். "இந்தக் கலவரத்திற்கு போலீஸார்தான் காரணம். இரண்டு வருடங்களாகப் பிரச்னையுடன் விழா நடைபெற்று வரும் இடத்தில் சொற்ப அளவில் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் நியமித்திருக்கின்றனர்.

ஓர் இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை உளவுப்பிரிவு, தனிப்பிரிவு போலீஸார் ஏன் முன்கூட்டியே கவனிக்கத் தவறினர் என்று தெரியவில்லை.

இந்தக் கலவரத்திற்கு சம்பந்தமில்லாத முஸ்லிம் இளைஞர்களையெல்லாம் கைது செய்து, அவர்கள் வெளி நாடு செல்ல முடியாத சூழ்நிலையையும் ஏற்படுத்துகின் றனர். `வழக்கில் பெயரைச் சேர்த்துவிடுவோம்' என்று சொல்லியே மிரட்டி போலீஸார் சிலர் ஆதாயம் பார்த்து வருகின்றனர்'' என்றார் கொதிப்புடன்.

ஆனால் போலீஸ் தரப்போ, "ஒன்றுகூடியவர்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. இதில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அப்பாவிகள் ஒருவரைக் கூட போலீஸ் கைதுசெய்யவில்லை'' என்று உறுதி கூறுகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சில முஸ்லிம் அமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, `நீதிமன்ற உத்தரவை மீறி கொடியேற்றம், சந்தனக்கூடு திருவிழா என அவர்கள் நடத்தினர். இதனைத் தட்டிக் கேட்கத்தான் சிலர் சென்றனர்.

அப்போது தர்காவினுள்ளே இருந்து கொண்டு சிலர் பாட்டில்களை வீசி எறிந்தனர். அதனால்தான் கலவரம் நிகழ்ந்துவிட்டது. தொடக்கத்திலேயே நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படியொரு சம்பவமே நடந்திருக்காது'' என்று போலீஸைக் குற்றம் சாட்டினர். அதேபோல் எதிர்த்தரப்பும் பத்திரிகையாளர்களிடம், `நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பைத்தான் கொடுத்திருக்கிறது.

ஆனால், விழா நடத்திய எங்களுக்கு போலீஸார் பாதுகாப்புத்தராத காரணத்தால்தான் கலவரம் நடந்திருக்கிறது' என்று அவர்களும் போலீஸாரையே குற்றம் சாட்டினர்.


0 comments:

.